அஜய் பங்கா  
தேசம்

உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா -அமெரிக்க இந்தியருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!

காமதேனு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனால், உலக வங்கியின் அடுத்த தலைவராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அஜய் பங்கா என்ற அமெரிக்க இந்தியருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

உலக வங்கியின் தலைவராக தற்போது இருப்பவர் டேவிட் மால்பஸ். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பரிந்துரையில் பொறுப்புக்கு வந்தவர். ஆனால் காலநிலை மாற்றம் தொடர்பான சவாலான நிதி ஆளுகையில் தொடர்ந்து இவர் சொதப்பி வருகிறார். இதனால் அதிகரித்த அதிருப்தி காரணமாக, இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருப்பினும், ஜூன் மாதம் இவர் பதவி விலக இருக்கிறார்.

இதனையடுத்து உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கான பரிந்துரையாக அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2 தினங்களுக்கு முன்னர் பரிந்துரை செய்தார். பிரபல சர்வதேச கிரெடிட் கார்டு நிறுவனமான ’மாஸ்டர் கார்ட்’ தலைமை செயல் அதிகாரியாக சிறந்த பணியனுபவம் பெற்ற இவர், தற்போது பங்கு நிதி நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

உலக வங்கி ஸ்பாதிக்கப்பட்டது முதலே அதன் மிகப்பெரும் பங்குதாரரான அமெரிக்கா கைகாட்டும் நபரே, உலக வங்கியின்தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார். இதர நாடுகளின் போட்டி பரிந்துரை அல்லது ஆட்சேபணை ஏதும் இல்லையெனில், உலக வங்கியின் நிர்வாகக்குழு கூடி அதிகாரபூர்வமாக அஜய் பங்கா நியமனத்தை விரைவில் அறிவிக்கும்.

இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான கூடுகை தொடர்ந்து நடைபெற்று வருவதன் மத்தியில், இந்திய பின்னணியிலான உலக வங்கி தலைவர் பரிந்துரையும் விதந்தோதப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள், அஜய் பங்காவுக்கு வரவேற்பும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். இவற்றின் மத்தியில் அஜய் பங்காவுக்கு, இந்தியா இன்னும் அதிகாரபூர்வ ஆதரவை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT