முன்னாள் அமைச்சரின் உதவியாளர் ரவி கைது
முன்னாள் அமைச்சரின் உதவியாளர் ரவி கைது எந்த துறையில் உங்களுக்கு வேலை வேணும்?: பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது
தேசம்

எந்த துறையில் உங்களுக்கு வேலை வேணும்?: பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது

காமதேனு

அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் புகார் அளித்திருந்தார். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹனிபா என்ற தரகர் ஆசைவார்த்தை கூறினார். மேலும் தரகர் ஹனிபா மற்றும் ஆக்டிங் ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த ரவி என்கிற டைப்பிஸ்ட் அறிமுகம் கிடைத்தது.

அவர் அரசு வேலை வாங்கித் தர 11 லட்ச ரூபாய் செலவாகும், தனக்குப் பலதுறைகளைச் சேர்ந்த அமைச்சர்களைத் தெரியும் என்பதால் எந்த துறையிலும் வேலைவாங்கித் தருவதாக கூறினார். இதை நம்பி 11 லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு அரசு வேலைவாங்கித்தராமல் அலைக்கழிக்க விட்டார். அதனால் பணத்தைத் திருப்பித்தருமாறு ஹனிபா, ரவியிடம் கேட்ட போது மிரட்டினார்கள் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்துலட்சுமி பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மீது போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்போது தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் ஏஎஸ்ஓவாக பணிபுரிந்து வந்த ரவி, பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது உறுதியானது.

இதனையடுத்து ரவி மற்றும் தரகர் விஜய் ஆகியோரை போலீஸார் கைது சிறையில் அடைத்தனர். அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்த ரவி என்கிற டைப்பிஸ்ட் ரவி பணியிட மாற்றம் செய்து தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், மருத்துவக்கல்லூரிகளில் சீட்டு வாங்கித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ரவியை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவர் எத்தனை பேரிடம்  வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT