தேசம்

வங்கிக் கணக்கு விவரங்களை கேட்க வேண்டாம்: ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு

காமதேனு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த நிலையில் அதனை பெற்றுக்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைதாரர்கள்  தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ரேஷன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும்,  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதாக தகவல்கள் பொதுமக்களிடம் பரவியது.

இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் முதலில்  அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில், ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் நேற்று உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்கள், புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேசன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரேசன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அந்த  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்குகளை பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மாற்றாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின்  இந்த நடவடிக்கைகளால் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் அதை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருக்கும் என்றும் பொதுமக்கள் தரப்பில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது. 

SCROLL FOR NEXT