உணவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்த  விவசாயிகள்
உணவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்த விவசாயிகள் 
தேசம்

`செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம்; பாரம்பரிய அரிசி வழங்கவும்'- அமைச்சரிடம் முறையிட்ட விவசாயிகள்

காமதேனு

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு வழங்கிய விவசாயிகள் மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த  ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு இயற்கை விவசாயிகள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். செயற்கையாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது சத்து குறைபாடுள்ள ஒரு சதவீத மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும், மீதமுள்ள 99 சதவீத மக்களுக்கு அது கெடுதல் விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். 

எனவே ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து  பல்வேறு விவசாய சங்கத்தினரும்  அரசுக்கு கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். காவேரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செயலாளர்  ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன்,  சித்த வைத்தியர் சித்தர் திருத்தணிகாசலம், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளையின் செயலாளர் சுதாகர் உள்ளிட்டவர்கள் நேற்று அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். 

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதன் மூலம் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை,  பெரு வணிகர்களுக்கு  லாபம் தரும் நடவடிக்கையாகவே அது அமையும்.  எனவே செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட்டு,  மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரிய அரிசி  ரகங்களை  ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று அவர்களது மனுவில்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT