தேசம்

விவசாயிகளின் போராட்டம் நியாயமற்றது: பஞ்சாப் முதல்வர் பரபரப்பு பேச்சு

காமதேனு

கோதுமைப் பயிருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகள் ஜூன் 18 வரை நெல் விதைக்கும் பணிகளில் இறங்க வேண்டாம் என்று பஞ்சாப் அரசு கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஜூன் 10 முதல் நெல் விதைப்புக்கு அனுமதியளிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தும் அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சண்டிகருக்கு ஊர்வலமாக வருவதற்கு விவசாயிகள் திட்டமிட்டனர். எனினும், ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் நேற்று சண்டிகர் - மொஹாலி எல்லையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லி சென்றிருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று பஞ்சாப் திரும்பிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்தார். விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது, விரும்பத்தகாதது என்று அவர் கூறினார். நிலத்தடி நீர் குறைந்துவருவதைத் தடுக்க தனது அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் பங்கேற்க வருமாறு விவசாயிகள் சங்கத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

பேச்சுவார்த்தைக்காகக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று கூறிய அவர், நிலத்தடி நீர் குறைந்திருப்பதைத் தடுப்பதில் அரசு கொண்டிருக்கும் உறுதியை வெற்று முழக்கங்களால் முறியடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். “தர்ணா போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. அரசிடம் தங்கள் குறைகளை அவர்கள் முறைப்படி தெரிவிக்க வேண்டும்” என்றார். நேற்று விவசாயிகளுடன் பஞ்சாப் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். நெல் விதைப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது விவசாயிகளின் நலனுக்கு எதிரானதல்ல என்றும், அவ்வாறு செய்வது நிலத்தடி நீரைப் பாதுகாக்க உதவும் என்றும் சுட்டிக்காட்டினார். “நானும் ஒரு விவசாயியின் மகன்தான். இவ்விஷயத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜூன் 10-ம் தேதிக்கும் 18-ம் தேதிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதைத் தடுக்கவும் நான் நடவடிக்கை எடுப்பது தவறா என சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களிடம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறிய பகவந்த் மான், “விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது எனக்கு ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் எல்லா இழப்புகளுக்கும் நான் இழப்பீடு வழங்குவேன்” என்றும் உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT