சென்னை தனியார் கல்லூரியில் படித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில் (21) என்ற மாணவர் விடுதியில் தங்கி பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது நண்பரான குஜராத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவருக்கு ஃபோன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக கூறியிருக்கிறார். அதனையடுத்து அவர் அருகில் இருந்த நண்பர்களிடம் இந்த தகவலை சொன்னதையடுத்து அனைவரும் சென்று பார்த்தபோது தனது அறையில் நிகில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதையடுத்து அவரை மீட்டு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிகில் உயிரிழந்தார். இதுகுறித்த போலீஸாரின் விசாரணையில், நிகில் ஆன்லைன் மூலம் விஷத்தை ஆர்டர் செய்து அதை அருந்தியிருப்பது தெரியவந்தது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.