மெட்ரோ
மெட்ரோ போலியான வேலைவாய்ப்பு செய்திகளை நம்ப வேண்டாம்: மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை!
தேசம்

போலியான வேலைவாய்ப்பு செய்திகளை நம்ப வேண்டாம்: மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை!

காமதேனு

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பரவும் பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கு குறிப்பிட்டக் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் அவ்வப்போது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப்களில் வருவது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகத்திற்கு பலரும் புகார் அளித்த நிலையில், இதுத் தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், '’சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் (Employment News) அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புக்குத் தகுதியுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் (Whatsapp) வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை, விளம்பரங்களை நம்பி, அதிகாரபூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT