வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் விளைவாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை இரவு அல்லது நாளை மறுதினம் தமிழக கரையை நெருங்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் 22-ம் தேதியன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், அன்றைய தினம் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.