தேசம்

`சாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கு; தயாராக இருங்கள்'- காவலர்களை அலர்ட் செய்யும் டிஜிபி

காமதேனு

"வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் வரவுள்ளதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்" என்று டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள், சாதி, மதத் தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள் வர உள்ளதால், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளதால் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

எனவே, ஆயுதப்படையில் உள்ள ஆளிநர்களுக்கும், சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று கவாத்து பயிற்சி வழங்க வேண்டும். ஆயுதப் படையில் துணை கண்காணிப்பாளர் முதல் ஆய்வாளர்கள் வரையானவர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழிநடத்துவதற்கு உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருள் மற்றும் இதர வாகனங்களை முறையாகப் பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். ஆயுதப் படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, அவசரகாலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT