10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பள்ளிகளிலேயே சனிக்கிழமைகள் மற்றும் காலை மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களை, தேர்வில் முதல் 10 இடங்களில் முன்னேற்றும் நோக்கத்தில் 'சிகரம் தொடு-2022-23' என்ற திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் பள்ளிகளிலேயே நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
'சிகரம் தொடு' என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க 10, 11, மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்விநலனைக் கருத்தில் கொண்டும், மாணவர்களுக்கு மனஅழுத்தத்துக்கு ஆளாகாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யும் வகையில் மேற்கண்ட வகுப்பு மாணவ - மாணவியருக்கு மட்டும் பள்ளி வேலைநாட்களில் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரமும், மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.