தேசம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது: உயர் நீதிமன்றம் கருத்து

காமதேனு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாமல்புரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படங்களை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டினர். இதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் படத்தை மை பூசி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை வைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வழக்கு தொடர்ந்தார். ஒலிம்பியாட் செஸ் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் படம் இடம் பெறாததற்கு நிபந்தனையின்றி தமிழக அரசு சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகினார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கூறுகையில், "இந்த நிகழ்வு நமது நாட்டிற்கு, சிறப்பாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. பிரதமர் இந்நிகழ்வை தொடங்கி வைப்பதாக நாளிதழ்களில் செய்யப்பட்ட விளம்பரங்களில், பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை" என குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில், பிரதமரின் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து "தமிழ்நாடு அரசு இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. பிரதமர் வருகை 22-ம் தேதியே உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளிதழ்களில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, "குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, "முதலில் இது நமது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. சோவியத் யூனியன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது. தேசம் குடியரசுத்தலைவர், பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இது போன்ற சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்" என கருத்து தெரிவித்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT