மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட 9 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடி கொட்டிவாக்கம் இடையே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் நடுவே பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு ராட்சத இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சுமார் 9 அடி தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் கடந்த ஒரு வார காலமாக பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை பணியை தொடங்குவதற்க்காக ஊழியர்கள் வந்த நிலையில் அங்கு காவலாளியாக பணியாற்றி வரும் அஜய்குமார்கேஷி அப்பகுதியில் சென்று பார்த்த போது தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒன்று மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இறந்த உடலை கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் இறந்த நபர் யார்? அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் தள்ளி கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.