மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான சியுஇடி நுழைவுத் தேர்வு தேதியை மத்திய பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (க்யூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. அடுத்த ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான சியுஇடி நுழைவுத் தேர்வு தேதியை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
அதன்படி, சி.யு.இ.டி இளங்கலை தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இளநிலை படிப்புக்கான விண்ணப்ப பதிவு அடுத்தாண்டு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும் என்றும் நுழைவுத் தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜூன் 3-வது வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியுஇடி முதுநிலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் எனவும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானிய குழு கூறியுள்ளது.