சந்திரசேகரன்.
சந்திரசேகரன். 
தேசம்

பெண் தொழிலதிபரிடம் கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

காமதேனு

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என கூறி பெண் தொழிலதிபரிடம் பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், " கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நானும், எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வடபழனியில் வி-சாஃப்ட் லிங்க் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சந்திரசேகர் என்பவரிடம் Forex டிரேடிங் செய்வதற்காக பணம் முதலீடு செய்து வந்தோம். அதற்கு மாதம் சந்திரசேகர் மூலம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ரிட்டன்ஸ் கொடுத்து வந்ததார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் முதலீட்டினை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றப்போவதாக சந்திரசேகர் கூறினார். அதனடிப்படையில் 22 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய திட்டமிட்டு முதற்கட்டமாக அதில் 2 சதவீதத் தொகையான 41 லட்சம் ரூபாயை மட்டும் சந்திரசேகரன் வங்கிக் கணக்கிற்கு நான் அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த பணத்திற்கான WT காயின் எண்களை மட்டுமே எனக்கு வழங்கினார். முதலீடு செய்ய அனுப்பிய பணத்தையோ, அதற்கான ரிட்டன்ஸ் தொகையையோ தராமல் என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்" என்று புகாரில் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்திரசேகரன் Wohlstand Token என்ற பெயரில் உள்ள கிரிப்டோ கரன்சியை, இணையதளம் ஒன்றைத் துவங்கி மற்ற முதலீட்டு இணையதளங்களிலும் தனது இணையதளத்தின் லிங்க்கைப் பகிர்ந்து, அதன் மூலமாக சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை பலரிடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் வி-சாஃப்ட் லிங்க் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான சந்திரசேகரனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிரிப்டோ கரன்சியின் விலை முன்பு உச்சத்தில் இருந்ததாகவும், ஆனால் தற்போது அதன் மதிப்பு வெகுவாக சரிந்து விட்டதால் முதலீடு செய்த பணம் அனைத்தும் நஷ்டம் அடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதை மறைத்து தனது நிறுவனத்தை சேர்ந்த சக இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி பலரிடம் இருந்து முதலீட்டை பெற வைத்து மோசடி செய்துவிட்டதாகவும் சந்திரசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்திரசேகரனை சைபர் கிரைம் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT