தேசம்

பாரத் ஜோடோ யாத்திரையின் போது சரிந்து விழுந்து மாரடைப்பு - காங்கிரஸ் எம்.பி மரணம்

காமதேனு

பஞ்சாபில் இன்று காலை நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் காலமானார். இவர் 2014 முதல் பஞ்சாபின் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பியாக இருந்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலம் பில்லூரில் இன்று காலை பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மரணமடைந்தார். யாத்திரையில் ராகுல் காந்தியுடன் நடந்து சென்ற அவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரிந்துவிழுந்தார். அவர் உடனடியாக பக்வாராவின் விர்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்ததும் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தார். எம்.பியின் மரணம் காரணமாக யாத்திரை இன்று நாள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.யின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஜலந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணத்தால் நான் மிகவும் வருந்துகிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT