தேசம்

நண்பர்கள் கண்முன்னே கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: படகு சவாரி சென்றபோது பரிதாபம்

காமதேனு

தூத்துக்குடி மாவட்டத்தில் நண்பர்களுடன் படகு சவாரி சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரி. இவரது மகன் ஜெனிட்டோ(19). இவர் சென்னையில் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். பொங்கல் விடுமுறைக்காக ஜெனிட்டோ ஊருக்கு வந்திருந்தார். இவர் தன் நண்பர்களுடன் உப்பாற்று ஓடை என்னும் காயலில் குளிக்கச் சென்றார். அங்கே குளித்துமுடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து படகு சவாரிக்குச் சென்றுள்ளார்.

உப்பாற்று ஓடை கடலில் போய் சேரும் பொழிமுகம் பகுதியை நோக்கி நேற்று மாலை படகு சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி படகில் இருந்த கல்லூரி மாணவர் ஜெனிட்டோ நீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சிறிதுநேரத்தில் தண்ணீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் இதுகுறித்துக் கொடுத்த தகவலின் பேரில் போலீஸாரும், அப்பகுதி மீனவர்களும் தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஜெனிட்டோ கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலையில் ஜெனிட்டோ சடலமாகப் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT