தேசம்

திருநங்கையாக மாறியதால் பறிபோன பட்டப்படிப்பு: உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!

காமதேனு

திருநங்கையாக மாறிய இளைஞர் கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல் போனது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உயர் கல்வித்துறை ஒப்புதலுடன் கல்லூரி படிப்பை தொடர ஏற்பாடு செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டு பொன்னேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். முதலாம் ஆண்டு படிக்கும் போது லோகேஷ் திருநங்கையாக மாறியுள்ளார். இதையடுத்து இரண்டாம் ஆண்டு படிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் அவருக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கரோனா காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து 2022-2023 கல்வி ஆண்டில் மீண்டும் கல்லூரி படிப்பை தொடர நினைத்தார். இதற்காக லோகேஷ் என்ற தனது பெயரை ஓவியா என மாற்றிக் கொண்டு பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். ஆனால் திருநங்கைக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர நிர்ணயம் செய்த வயதை விட 5 நாட்கள் அதிகமாக இருந்ததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து கல்லூரி படிப்பை தொடர வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அவரின் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் உயர்கல்வி துறையின் ஒப்புதலுடன் திருநங்கை ஓவியாவுக்கு கருணை அடிப்படையில் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் இளநிலை கணிதவியல் படிக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஓவியாவிடம் வழங்கினார்.

SCROLL FOR NEXT