தேசம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார் தந்தை: பின்தொடர்ந்து சென்ற 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

காமதேனு

தனது தந்தையுடன் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் தந்தையைப் பின் தொடர்ந்து சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கீழக்கரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் மீனவர் உமையராஜ். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத சுமித்திரன் என்ற 8 வயது மகன் இருந்தார். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் உமையராஜ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். அப்போது, தனது தந்தையுடன் கடலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் அவரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறான் மகன் சுமித்திரன்.

சிறுவன் வருவதை அறியாத தந்தை படகில் ஏறவே, சுமித்திரன் கடல் அலையில் சிக்கி மூழ்கினான். தொடர்ந்து, மகன் மூழ்கியதை அருகில் இருந்த மீனவர்கள் தெரிவிக்கவே கடலில் குதித்த உமையராஜ் மகனை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கீழக்கரை கடலோரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT