தேசம்

பிளாஸ்டிக் துண்டை விழுங்கியதால் மயக்கம்: பறிபோன 7 மாதக் குழந்தையின் உயிர்

காமதேனு

சிவகாசி அருகே 7 மாத ஆண் குழந்தை எதிர்பாராமல் வீட்டின் கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டை விழுங்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து சிவகாசி டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி துரைசாமிபுரத்தைச் சேர்ந்த கார்த்தீஸ்வரனுக்கு 7 மாதங்களே ஆன கலைக்கதிர் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், இன்று வீட்டில் குழந்தை கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டை எடுத்து விழுங்கி உள்ளான். குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக குழந்தை சேர்க்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT