தேசம்

காவலரை கார் ஏற்றிக் கொலை செய்த சகோதரியின் கணவர்: முன்விரோதத்தால் நடந்த விபரீதம்

காமதேனு

அக்காவின் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த வடக்கு செய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் காமேஷ்குமார்(37). இவர் சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காமேஷ்குமாருக்கும் அவர் அக்காவின் கணவர் மதன் பிரபு என்பவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று செய்யூரில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட வந்தார். நிலத்தைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பினார். செய்யூர் சால்ட் காலனிக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் நின்று கொண்டு நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சால்ட் காலனியிலிருந்து மதன் பிரபு அவரது நண்பர்களுடன் காரில் செய்யூர் நோக்கி வந்துள்ளார். அங்கே சாலையோரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காமேஷ் குமாரை கண்ட மதன் பிரபு, அவர் மீது காரை வேகமாக ஏற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதால், காரின் முன்பகுதி சிதைந்து பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. காரை இயக்க முடியாததால் காரை அங்கேயே நிறுத்திய மதன் பிரபு, தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்து அங்கு விரைந்த செய்யூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் காமேஷ்குமாரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காமேஷ் குமாரின் மனைவி ரேகா கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும், மதன் பிரபு மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT