தேசம்

குழந்தை இறந்தே பிறந்தாலும் 60 நாட்கள் விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு!

காமதேனு

குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான விவரங்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அளித்து வருகிறது. அந்தவகையில் குழந்தை பிறந்தவுடனே இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்புப் பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தாயின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான, குழந்தை பிறந்த உடனேயே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த பெண் ஊழியர் ஏற்கெனவே பிரசவ கால விடுப்பில் இருந்தாலும், அந்த விடுப்பை வேறு விடுப்பாக மாற்றிக்கொண்டு, குழந்தை இறந்த நாளில் இருந்து 60 நாட்கள் கூடுதலாகச் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. பிரசவம் ஆனதிலிருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெறத் தகுதி உண்டு என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT