தேசம்

துண்டிக்கப்பட்ட பூசாரி தலை… ஆற்றில் வீசிச்சென்ற வாலிபர்: முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்!

காமதேனு

இலங்கையில் முன்விரோதம் காரணமாக கோயில் பூசாரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர், அவரின் தலையைத் துண்டித்து ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மாத்தறை மாவட்டம், அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் தலை இல்லாத பூசாரியின் உடல் கிடந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது கூரிய ஆயுதத்தால் பூசாரியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரின் தலையை அங்கு தேடிய போது கிடைக்கவில்லை. இந்தக் கொலையைச் செய்தது யார் என காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அப்போது பூசாரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 24 இளைஞர் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். அவர் பூசாரியைக் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. அத்துடன் பூசாரியின் தலையை அறுத்து நில்வலா கங்கை ஆற்றில் வீசியதாகக் கூறினார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், முன் விரோதம் காரணமாக பூசாரியைக் கொன்ற போது அடுக்க வந்த அவரது மனைவி, மகளையும் அவர் வாளால் வெட்டியது தெரிய வந்தது. படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரின் தந்தை, தாய் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மூவரையும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்துகின்றனர். அத்துடன் பூசாரியின் தலையையும், அவரைக் கொலை செய்யப்பயன்படுத்திய வாளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT