தேசம்

மாநிலம் முழுக்க, சிறுமிகளை மணமுடித்தவர்களை போக்சோவில் கைது செய்ய உத்தரவு!

காமதேனு

அசாம் மாநிலம் முழுக்க 14-க்கு குறைவான வயது சிறுமிகளை மணந்த ஆண்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் மாநிலத்தின் சுகாதார அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் அசாம் முழுக்க சுமார் 31% திருமணங்கள், வரையறுக்கப்பட்ட வயதுக்கு கீழான சிறுமிகளை மணமுடிக்கச் செய்திருப்பதாக புள்ளிவிவரம் தந்தது. இதனையடுத்து அமைச்சரவையை கூட்டி விவாதித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

அதன்படி 14- 18 வயது சிறுமிகளை மணமுடித்த ஆண்கள் மீது, 2006ம் ஆண்டின் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதற்கும் கீழாக, அதாவது 14 வயதுக்கு குறைவான பெண்களை மணந்த மாப்பிள்ளைகளை கேள்வியின்றி, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கைது செய்யுமாறும் முதல்வர் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கிராமங்களில் அரங்கேறும் குழந்தை திருமணங்கள் குறித்து உரிய பஞ்சாயத்து அலுவலர்கள் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமின் வளர்ச்சிக்கு பெண் கல்வியும், குழந்தை திருமண தடுப்பும் அவசியம் என்றளவில் புதிய நடவடிக்கையை அசாம் முதல்வர் முன்னெடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT