புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2400 மதுபாட்டில்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் மதுபாட்டில்களைக் கடத்தியவர்களையும் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று நள்ளிரவு வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து அவ்வழியாக வந்த 2 கார்களை போலீஸார் தடுத்து நிறுத்தி தீவிரமாக சோதனையிட்டனர்.
அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து மதுபானப் பாட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய ரூ 15 லட்சம் மதிப்பு கொண்ட 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ரகு, கௌதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமார். சோமுராஜ், செல்வராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் காரைக்காலில் இருந்து மணல்மேடு கடலங்குடி பகுதிக்கு இந்த மதுபாட்டில்கள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.