தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பெண் காவல் ஆய்வாளர் காவல் நிலையத்திலேயே கொசு மருந்து குடித்து மயங்கினார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் சாந்தகுமாரி(45) நேற்று இரவு வழக்கம்போல் பணிக்கு வந்தவர் யாரிடமும் பேசாமல் ஒருவித குழப்பத்துடனே இருந்தார். இந்நிலையில் திடீர் என தன் அறையில் இருந்த கழிப்பறைக்குச் சென்றவர், அங்கிருந்த கொசு மருந்தை எடுத்துக்குடித்தார். தொடர்ந்து அதை வெளியில் சொல்லாமல் வழக்கம்போல் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் ஆய்வாளர் சாந்தகுமாரி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சக காவலர்கள் சேர்ந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து அங்கிருந்து சாந்தகுமாரி நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து மாற்றப்பட்டு, இப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார் சாந்தகுமாரி.
இவரது சொந்த ஊர் மதுரையாகும். சமீபத்தில் தான் சாந்தகுமாரி ஆலங்குளத்திற்கு பணியிட மாற்றலாகி வந்தார். அவர் ஏன் தற்கொலை முயற்சி செய்தார் என்பது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.