தாக்குதலுக்குள்ளான மீனவர்களுடன்  உறவினர்கள்
தாக்குதலுக்குள்ளான மீனவர்களுடன் உறவினர்கள் 
தேசம்

கடலில் தள்ளி மீனவர்களைத் தத்தளிக்க வைத்தனர்: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

காமதேனு

கோடியக்கரை அருகே  மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்களை தாக்கி கடலில் தள்ளிய  இலங்கை கடற்படையினர்  படகில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான மீன்கள்,  வலை உள்ளிட்ட பொருட்களை  எடுத்துச் சென்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காசாக்குடிமேட்டைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 24 ம் தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரக்குமார், அர்ஜுனன், விஜேந்திரன் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடலுக்குச்  சென்றனர். 

நேற்று இரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினராம். அத்துடன் படகில்  இருந்த மீனவர்களை கடலில் தள்ளிவிட்டு அவர்களை சித்திரவதை செய்திருக்கின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் படகை பிடித்தவாறு கடலுக்குள்  தத்தளித்து மீண்டும் படகில் ஏறியதாக வேதனையுடன் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் படகில்  இருந்த மீன் மற்றும் வலை, ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இலங்கை கடற்படையினர்  எடுத்து சென்றனர். 

இதனையடுத்து  மீனவர்கள் வெறுங்கையுடன்  காரைக்கால் துறைமுகத்திற்கு திரும்பி  வந்தனர். மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினருக்கு காரைக்கால் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வினை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வாரத்தில் இலங்கை கடற்டையினர் அத்துமீறும் இரண்டாவது சம்பவம் இது.

SCROLL FOR NEXT