தேசம்

6 மாதங்களுக்குப் பின் நாய் போல் ஊளையிடும் வாலிபர்: தடுப்பூசி போடாததால் வந்த வினை

காமதேனு

ஒடிசாவில் நாய் கடித்த வாலிபர் ஒருவர் நாய் போல ஊளையிடுவதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உதய்பூரைச் சேர்ந்தவர் ராஜேஸ் பியூரா(25). தொழிலாளியான இவரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாய் கடித்தது. அதற்கு அவர் தடுப்பூசி உள்ளிட்ட எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் திடீரென ராஜேஸ் பியூரா, நவ.1-ம் தேதி முதல் நாய் போல ஊளையிட ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சில நாட்களில் இது சரியாகி விடும் என்று நினைத்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்து ராஜேஸ் பியூரா நாயைப்போல ஊளையிடவும், பயந்து போன அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், " நாய் கடித்த பிறகு சிகிச்சைக்கு செல்லாத ஒருவருக்கு ஹைட்ரோஃபோபியா அல்லது தண்ணீர் பயம் இருக்கும். அதன் அறிகுறிகளில் லாரிங்கோஸ்பாஸ்சும் ஒன்று. அதனால் தான் ராஜேஸ் பியூரா நாய் போல ஊளையிடுகிறார்" என்றனர்.

SCROLL FOR NEXT