அதிமுக பிரமுகர்கள் இருவர் உட்பட மூவர் கார் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு. அதிமுக பிரமுகர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் ஒப்பந்தப்பணிகளுக்காக ஜேசிபி போன்ற இயந்திரங்களை வைத்துள்ளனர். அந்த வாகனங்கள் பழுதான காரணத்தால் அவற்றைச் சரிசெய்ய உள்ளூரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர். அந்த இயந்திரங்களைச் சரிசெய்த பிறகு மீண்டும் அவர்களைச் சொந்த ஊருக்கு காரில் சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த காரில் 5 பேர் பயணித்துள்ளனர்.
வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக மலையம்பாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியிருக்கிறது. இதையடுத்து சாலை ஓர தடுப்பில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த இருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.