விருதுநகரில் கணவரின் டார்ச்சர் தாங்காமல் தனது 2 பெண் குழந்தைகளை கொல்ல முயன்ற தாய், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். மில் கூலித்தொழிலாளி. போதைக்குப் பழக்கத்திற்கு அடிமையான இவர் தன் மனைவி ஜான்சிராணியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று மீண்டும் அவர்களுக்குள் குடும்பச்சண்டை ஏற்பட்டுள்ளது. இரவு அந்தோணிராஜ் வேலைக்குச் சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜான்சிராணி தனது மூத்த மகள் மோனிகா மேரியின் (13) கழுத்தை கத்தியால் அறுத்து வீட்டிற்குள் போட்டு பூட்டினார். இளைய மகள் ரித்திகா மேரியை (9) அழைத்துச் சென்று அல்லம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
இந்நிலையில் இருந்து வீட்டில் இருந்து ஜான்சிராணியின் மூத்த மகள் மோனிகா மேரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து காயங்களுடன் இருந்த அவரை மீட்டனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அல்லம்பட்டி ரயில்வே மேம்பாலத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஜான்சிராணி, ரித்திக்கா மேரியை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அல்லம்பட்டி விஏஓ சுதாராணி கொடுத்த புகாரின் பேரில், விருதுநகர் கிழக்கு போலீஸார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜான்சிராணியிடம் விசாரித்து வருகின்றனர். கணவனின் கொடுமை தாங்க முடியாமல் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்ய முயன்று, தாயும் தற்கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.