தேசம்

விஸ்வரூபம் எடுக்கும் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரம்: தொடர் கைதுகளால் சிதம்பரத்தில் வெடித்தது போராட்டம்

காமதேனு

குழந்தை திருமண விவகாரம் தொடர்பாகச் சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளரை காவல்துறையினர் நேற்று இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து தீட்சிதர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சில தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் இருவரைக் கடலூர் மாவட்ட சிறப்புப் படைப்பிரிவு போலீஸார் விசாரணைக்காகச் சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த தீட்சிதர்கள் கோயில் முன்பாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்குமிடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. மேலும் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட சில தீட்சிதர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற தீட்சிதர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட கூடுதல் எஸ்பி அசோக்குமார் தலைமையில் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

SCROLL FOR NEXT