தேசம்

கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி: மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்

காமதேனு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டு இருந்த பெண் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஐ.என்.டி.யூ.சி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன்(52). தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ராமலெட்சுமி(45). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று பாஸ்கர பாண்டியனும், அவரது மகன், மகள் ஆகியோரும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டு இருந்தார் ராமலெட்சுமி.

அப்போது, கிரைண்டருக்குள் கையை விட்டு மாவை தள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிரைண்டருக்குள் மின்சாரம் பாய்ந்து ராமலெட்சுமி கருகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நேற்று மாலையில் பள்ளிக்கூடம் விட்டு, வீட்டுக்கு வந்த குழந்தைகளும், ஆசிரியர் பாஸ்கர பாண்டியனும் மாவு அரைத்துக்கொண்டிருந்த ராமலெட்சுமி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அந்த வீட்டின் மின்சப்ளை நிறுத்தப்பட்டு ராமலெட்சுமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT