தேசம்

ரிலீஸான அன்றே திருடி மீண்டும் சிக்கிய 'சிறைப்பறவை'

காமதேனு

திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி பாளையங்கோட்டை சிறையில் இருந்தவர் ரிலீஸான அன்றே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரை போலீஸார் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்பு கைது செய்தனர்.

திருநெல்வேலி சேவியர் காலனியைச் சேர்ந்தவர் ரெஜின் ராகுல். பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக இருக்கும் இவர் கடந்த 11-ம் தேதி குடும்பத்துடன் சாத்தான்குளத்திற்கு குடும்ப நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். மறுநாள் காலையில் ரெஜின் ராகுல் வீட்டுக்கு வந்தபோது அவரது மொபட் மற்றும் டேப்ளாய்டு ஆகியவை மாயமாகி இருந்தது. மேலப்பாளையம் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் அவரது வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வுசெய்தனர். அப்போது ஒரு வாலிபர் மொபைட்டை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர் உவரியைச் சேர்ந்த பெஞ்சமின்(33) எனத் தெரியவந்தது. இவர் அதே 11-ம் தேதி மாலையில் தான் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வேறு ஒரு குற்றவழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அன்று இரவே பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ரெஜின் ராகுல் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பெஞ்சமினை மேலப்பாளையம் போலீஸார் இன்று கைது செய்து மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலேயே அடைத்தனர்.

SCROLL FOR NEXT