தேசம்

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து... பறிபோன உயிர்: அதிர்ஷ்டவசமாக தப்பிய 25 பயணிகள்

காமதேனு

கூடலூர் அரசு மருத்துவமனை அருகே கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் பலியானார்.

தேனி மாவட்டம், கூடலூர் அரசு மருத்துவமனை அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பாக புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் ஒரு வழித்தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. நேற்று இரவு கூடலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக சாலையோரத்தில் மண் சரிந்தது.

கவிழ்ந்த அரசு பேருந்து

இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் காவல் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்தனர். மேலும், கூடலூர் பகுதியைச் சேர்ந்த மாயி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த பேருந்தை ஜெயமங்கலத்தைச் சேர்ந்த 50 வயது ஓட்டுநரான பழனிச்சாமி இயக்கி வந்தது தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் மண் சரிந்திருப்பதை இரவு நேரத்தில் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT