தேசம்

காணாமல் போன திமுக பிரமுகர் பிணமாக மீட்பு: கை, கால்களைக் கட்டி கொலை செய்து கிணற்றில் வீசிய பயங்கரம்

காமதேனு

கை, கால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகரின் உடலைக் கைப்பற்றி பேரையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை டி. கல்லுப்பட்டி அருகே உள்ள சிட்டுலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கு முட்டையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று மிதந்துள்ளது. இது குறித்து சிட்டுலொட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனுக்கு வந்த தகவலையடுத்து பேரையூர் காவல் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து பேரையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கிணற்றில் சாக்கு மூட்டையில் கிடந்தது டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம். சுப்புலாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதியின் மகன் பாலாஜி (25) என்பது தெரிய வந்துள்ளது. திமுக பிரமுகரான இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனால், இவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.

இச்சூழலில், கடந்த 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இவரை எதற்காக கொலை செய்தார்கள், கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT