தேசம்

`ராக்கெட்ரி படத்தில் 90% பொய் தகவல்'- பரபரப்பை கிளப்பும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள்!

காமதேனு

"நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை" என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் பான் இந்தியன் திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருக்கிறார். நாயகியாக சிம்ரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை 1-ம் தேதி வெளியாக வசூலில் சாதனை படைத்தது.

அண்மையில் இந்த படம் குறித்து பேசிய நடிகர் மாதவன், "விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்கக் கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். அவரை சந்தித்தபோது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார். நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது. அது மீள முடியாததாகவே உள்ளது’ என்றார். அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது" என்றார்.

தற்போது, இந்த படம் சர்ச்சையை சந்தித்துள்ளது. "நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை" என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளான ஏ.இ.முத்துநாயகம், ஈ.பி.எஸ்.நம்பூதிரி, சசிகுமாரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த படம் குறித்து திருவனந்தபுரத்தில் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாராயணன் பல ஆண்டுகளாக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நாராயணன், படத்தில் தெரிவித்திருக்கும் தகவல்களின் படி பொதுமக்களை தவறாக வழிநடத்தப்பட்டதாக தெரிகிறது. நாராயணன், திரைப்படத்திலும், ஊடகங்களிலும் பொய்யான தகவல்களை தெரிவித்து இஸ்ரோ மற்றும் விஞ்ஞானிகளை அவமானப்படுத்தி இருப்பதால் சில விஷயங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம்.

நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதால் கிரையோஜெனிக் வளர்ச்சியில் தாமதம், நாட்டிற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாக அவர் தகவல் பரப்புவது தவறானது. இஸ்ரோ 1980-களில் மத்தியில் திரவ உந்துவிசை ராக்கெட் இன்ஜினான கிரையோஜெனிக் உருவாக்கும் பணியை தொடங்கியது.

ஈ.பி.எஸ்.நம்பூதிரி தலைமை தாங்கிய திட்டத்தில் நாராயணனுக்கு எந்த தொடர்பும் கிடையாது. கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் நாராயணனின் பணிகள் எதுவும் கிடையாது. விகாஸ் இன்ஜினுக்குப் பின்னால் நாராயணன் இருந்தார் எனக் கூறுவது தவறானது. ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தவறை நான்தான் திருத்தியதாக திரைப்படத்தில் நாராயணன் கூறியிருக்கிறார். அதுவும் முற்றிலும் தவறானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க இஸ்ரோ தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றனர்.

வசூலில் சாதனை படைத்த மாதவனின் ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல் அனைத்தும் பொய் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT