தேசம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரை

காமதேனு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியத்தின் பரிந்துரையை ஆய்வு செய்யும் சட்டவாரியம், அதற்கு அனுமதி அளித்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு வழங்கும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் புதிய நீதிபதிகள் பதவி ஏற்பார்கள். கொலிஜியம் பரிந்துரை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய நீதித்துறை அலுவலர்களையும், வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன், லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி, பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய வழக்கறிஞர்களையும் கொஜிலியம் புதிய நீதிபதிகளாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.,

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.

SCROLL FOR NEXT