கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திச்சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - இலங்கை கடற்பரப்பில் பல கட்ட கண்காணிப்புகளையும் மீறி அவ்வப்போது கடத்தல் சம்பவங்களில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை இலங்கை கடற்பரப்பில் போதை பொருட்களுடன் தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துளது.
இலங்கை தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்படகு ஒன்று அப்பகுதியில் ஊடுருவி சென்றுள்ளது. இதனைக்கண்ட இலங்கை கடற்படையினர் அப்படகினை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட 'ஐஸ்' எனப்படும் போதைப்பொருள் சிக்கியது.
இதையடுத்து அந்த படகில் இருந்த வேதாளையை சேர்ந்த புர்ஹான், ரஹ்மான் அலி, கஜினிமுகம்மது ஆகிய 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் 3 பேரையும் மன்னார் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலில் வேதாளை பகுதியை சேர்ந்தவர்கள் அடிக்கடி சிக்குவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.