தேசம்

2 மகள்களுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்த தம்பதி: சாவதற்கு முன் நடந்த சோகம்!

காமதேனு

ஹைதராபாத்தில் நிதிநெருக்கடி காரணமாக 2 மகள்களுடன் தம்பதி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் அடிபட்லாவில் உள்ள குர்மல்குடா ஏரியில் நேற்று நள்ளிரவு 4 பேர் குதித்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று ஏரியில் பார்த்த போது 4 பேரின் உடல்கள் மிதந்தன.

விசாரணையில், இறந்தவர்கள் குர்மல்குடாவுக்கு அருகே உள்ள ஷாஹீன் நகரைச் சேர்ந்த குர்தஸ் பாஷா (37), அவரது மனைவி பாத்திமா பேகம் (28) மற்றும் அவர்களது மகள்கள் பிரதவுஸ் பேகம் (9), கெமன் பேகம் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் சந்தோஷ் நகருக்கு இடம் பெயர்ந்தாக தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " நிதி நெருக்கடியில் இருந்த குர்தஸ் பாஷா நேற்று தனது சகோதரரிடம் பணம் கேட்டுள்ளார். இதையொட்டி இவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டூவீலரில் இவர்கள் நான்கு பேரும் குர்மல்குடா ஏரிக்கு வந்துள்ளனர். இதன் பின் அவர்கள் நான்கு பேரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் டூவீலரில் வந்தவர்கள் குழந்தைகளோடு ஏரியில் குதிப்பதை அவ்வழியே சென்றவர்கள் கண்டு உடனடியாக எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால், நாங்கள் செல்வதற்கு முன்பே நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குர்தஸ் பாஷாவின் டூவீலரைக் கொண்டு விசாரணை நடத்திய போது, அவர்கள் யார் என்பதை அடையாளம் தெரிந்தது" என்றனர். இச்சம்பவம் குறித்து அடிபட்லா போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT