தேசம்

ஒரே வாரத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா: ஜப்பானில் வேகமெடுக்கும் 7-வது அலை

காமதேனு

ஜப்பானில் கரோனா ஏழாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,95,301 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கரோனா 7-வது அலை உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 2,61,29 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவாகும். நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000 நெருங்கியுள்ளது.

ஜப்பானில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. கரோனா பாதிப்புக்கு ஆளான 15 லட்சம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகஸ்ட் 8- ம் தேதி முதல் 14-ம் தேதி என்ற ஒரு வாரத்தில் மட்டும் 13,95,301 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவிலும் ஒரே வாரத்தில் 13 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜப்பானில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வீடு திரும்புவதால், இந்த பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜப்பான் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டில் 31 சதவீதம் பேர் நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஜப்பானைப் போலவே தென்கொரியாவிலும் கரோனா புதிய அலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் நாள்தோறும் 1.5 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அந்நாட்டில் புதிய கோவிட்-19 அலை ஏற்பட்டுள்ளதா என தென் கொரிய அரசு கண்காணித்து வருகிறது.

SCROLL FOR NEXT