தேசம்

விபத்தில் சிக்கியவர்களை அழைத்துச்சென்ற 108 ஆம்புலன்ஸ்- வழிவிடாத லோடு ஆட்டோ டிரைவருக்கு 11 ஆயிரம் அபராதம்

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் விளையாட்டுக் காட்டியபடி சென்ற லோடு ஆட்டோ ஓட்டுநருக்கு 11 ஆயிரம் அபராதம் விதித்து, போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். வீடியோ பதிவினை ஆதாரமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி அருகே எதிர், எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் நேருக்கு, நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் கால்களிலும் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிவாசிகள் 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் அவர்களை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

அப்போது முன்னால் சென்ற லோடு ஆட்டோ பலமுறை ஹார்ன் சத்தம் எழுப்பியும் ஆம்புலன்ஸிற்கு வழிவிடவில்லை. மேலும் ஆம்புலன்ஸ் முந்திச் செல்ல வழி கொடுக்காமல் வளைந்து, நெளிந்து லோடு ஆட்டோவை ஓட்டினார். 108 ஆம்புலன்ஸில் டிரைவரின் அருகில் இருக்கும் சுகாதாரப் பணியாளர் இதை வீடியோவாக எடுத்து குளச்சல் போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பினார். போலீஸார், அந்த லோடு ஆட்டோவில் இருக்கும் பதிவெண்ணின் அடிப்படையில் சோதனை செய்தனர். இதில் லோடு ஆட்டோவை அய்யப்பன் என்பவர் டிரைவராக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அய்யப்பனுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT