தேசம்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம்: தயாரித்து விற்றவர்கள் கைது

காமதேனு

பிரபல பெருங்காய நிறுவனமான எல்.ஜி பெருங்காயத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை  சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் எல்ஜி பெருங்காயத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. இதனை அறிந்து கொண்ட சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்ற  லேபில்கள் ஒட்டப்பட்ட டப்பாக்களில் அடைத்து, தமிழ்நாடு முழுவதும் விற்று வந்திருக்கின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்தும் பெருங்காயம் தரம் சரியில்லை என்று எல். ஜி  நிறுவனத்திற்கு புகார்கள் சென்றன.

தொடர்ந்து எல்.ஜி பெருங்காயம் நிறுவனத்தை சேர்ந்த சதீஸ் வர்க்கர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.  அதில், ‘எங்கள் நிறுவனத்தின் பெயரை சிலர் முறைகேடாக பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து தமிழகம் மற்றும் ஆந்திராவில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த போலி பெருங்காயத்தை பயன்படுத்துவதால் மக்களின் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

எனவே எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை நடைபெற்று வந்தது. சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை பகுதியின் 15 இடங்களில் போலியாக பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 

அவர்களின் சோதனையில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் ( 49), ரவி (58), மணிகண்டன் (32), சதீஷ் (30), வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (72), ராமலிங்கம் (76), சுமதி (42), தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஷாம்ஷத் இலாத் (32), கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசன் (35), எம்.கே.பி.நகரை சேர்ந்த கனாராம் (48) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த கும்பலிடம் இருந்து போலி  பெருங்காய தூள் மற்றும் கட்டிகள், அவற்றை தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள், அடைத்து விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த காலி டப்பாக்கள், அச்சு எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற போலி கலப்பட உணவுப் பொருட்களால் பொதுமக்களின் விலை மதிப்பில்லாத உயிர்கள் அல்லலுக்கு உள்ளாவது தொடர் கதையாகவே நீடிக்கிறது.

SCROLL FOR NEXT