மாணவி கொலை
மாணவி கொலை கத்தியால் குத்தி 10-ம் வகுப்பு மாணவி கொலை: காணாமல் போனவர் சடலமாக மீட்பு
தேசம்

கத்தியால் குத்தி 10-ம் வகுப்பு மாணவி கொலை: காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காமதேனு

ஹரியாணாவில் டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் ரேவாரியைச் சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவி, புதனன்று டியூசனுக்குச் சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் அவரது பெற்றோர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். மாணவி காணாமல் போனது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரோஹ்தக்-பாவல் நெடுஞ்சாலை அருகே காணாமல் போன மாணவியின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், சிறுமியின் உடலை மீட்டனர். சிறுமியின் கழுத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரை வேறு எங்காவது கொலை செய்து உடலை இப்பகுதியில் வீசி விட்டுச் சென்றார்களா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரிய வரும் என்று இன்ஸ்பெக்டர் வித்யா சாகர் கூறினார். டியூசன் சென்ற மாணவி கொலை செய்யப்பட்டு உடல் சாலையில் வீசப்பட்ட சம்பவம் ஹரியாணாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT