கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்ட இளைஞர் 
சர்வதேசம்

நடுக்கடலில் கவிழ்ந்த படகில் தத்தளித்த இளைஞர்... வட்டமிட்ட சுறா!

காமதேனு

அமெரிக்காவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து 30 மணி நேரம் கடலில் தத்தளித்த இளைஞரை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடலில் தத்தளித்த இளைஞர் சார்லஸ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சார்லஸ் என்ற இளைஞர் மீன்பிடிப்பதற்காக படகில் கடலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் மீன்பிடிக்க சென்று 24 மணி நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. இதனால் பீதியடைந்த அவரது தந்தை அமெரிக்க கடலோரக் காவல் படையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து களத்தில் இறங்கிய கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த தேடுதலின் போது கரையிலிருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சார்லஸை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு படகில் விரைந்த அமெரிக்க கடலோரக் காவல் படையினர் சார்லஸை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக பேசிய சார்லஸ், 12 அடி நீளம் கொண்ட தனது படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்ததாகவும், அப்போது தனது செல்போன் மற்றும் லைப் ஜாக்கெட் ஆகியன கடலில் அடித்து செல்லப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

மேலும் பல மணி நேரமாக கடலில் மிதந்த தன்னை சுறா மீன் வட்டமிட்டதாகவும், சரியான நேரத்தில் தன்னை கடலோரக் காவல் படையினர் மீட்டதால் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT