காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் இருக்கிறார். காஞ்சி தெற்கிலும் ஒரு காலத்தில் இவருக்கு ஆதரவாளர்கள் இருந்தனர். அதில் முக்கியமானவர் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகர். இவரை ஒன்றியமாக்கியதே அன்பரசன் தான். தெற்கு மாவட்ட செயலாளரான சுந்தரிடம் ஒரு காலத்தில் முட்டிக்கொண்டு நின்ற ஞானசேகர், சொந்த மாவட்டத்தின் செயலாளரைப் பகைத்துக் கொண்டால் எதுவும் நடக்காது என்ற அரசியலைப் புரிந்து கொண்டு இப்போது அவரோடு அத்தனை நெருக்கமாக இருக்கிறாராம். சுந்தரே கதி என மாறிப் போனவர், தனது ஒன்றியத்தில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தனது அரசியல் ஆசான் அமைச்சர் அன்பரசனைக்கூட அழைக்காமல் சுந்தரை வைத்தே சுமூகமாக முடித்துவிடுகிறாராம். ரொம்பப் போனால், வேறு யாராவது அமைச்சரை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி ஆசானை வெறுப்பேற்றுகிறாராம். இதையெல்லாம் பார்த்து விட்டு, ‘எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே’ என்ற ரீதியில் ஆதங்கப்படுகிறாராம் அமைச்சர் அன்பரசன்.