அறிவொளி

பள்ளிதோறும் சிறார் திரைப்படங்கள்: தமிழக அரசுக்கு சீனு ராமசாமி நன்றி

காமதேனு

சினிமா வாயிலாக குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக திகழ வைக்கும் நிகழ்வுகளுக்காக என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்களின் ரசனையை மேம்படுத்தும் விதமாக திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல் ? சினிமா வழிகாட்டும் சினிமா, குழந்தைகள் விழிப்புணர்வு சினிமா, வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா, என நம்மை உயர்த்தும் ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் சினிமா ரசனைக் கல்வியை தொடங்க வேண்டுமென தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். நானும், நாங்களும் இக்கருத்தினை வலியுறுத்தினோம். இன்று அது நனவானது.

நல்ல சினிமாவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக தமிழக அரசுப் பள்ளியான

சென்னை -92, விருகம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளில் மாதந்தோறும் ஒளிபரப்படுகிறது. 14.11.2022 அன்று “குப்பச்சிக்களு” என்ற கன்னட திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். S.மார்ஸ், நேர்முக உதவியாளர் ஸ்ரீபிரியா மற்றும் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் கா.வாசுகி அவர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.

சினிமா வாயிலாக குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக திகழ வைக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் என என் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சார்ந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக பாடநுல் கழக தலைவர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT