அறிவொளி

பட்டியலின மாணவிகள் பரிமாறிய உணவை தூக்கி எறிய சொன்ன சமையல்காரர்: அரசுப்பள்ளியில் நடந்த அவலம்!

காமதேனு

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசுப்பள்ளியில் பட்டியலின மாணவி பரிமாறிய மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்திய சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் பரோடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் லாலா ராம் குர்ஜார் என்பவர் சமையல்காரராக உள்ளார். இவர் சமைத்த மதிய உணவை இரண்டு பட்டியலின மாணவிகள் மாணவர்களுக்கு பரிமாறியுள்ளனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த லால் ராம், பட்டியலினத்தவர் பரிமாறியதால் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் உணவை தூக்கி எறியும்படி கூறினார். மாணவர்கள் அவரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி உணவை தூக்கி வீசினார்கள்.

இதனால் மனமுடைந்த சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்கள். அவர்கள் தங்கள் உறவினர்கள் சிலருடன் பள்ளிக்கு வந்து சமையல்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து சமையல்காரர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோகுந்தா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும், விசாரணையின் சம்பவம் உண்மை என்று கண்டறியப்பட்டதால் உடனடியாக அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. "சமையல்காரர் எப்போதும் உயர் சாதியைச் சேர்ந்த மாணவர்களையே உணவைப் பரிமாற சொல்வார். ஆனால் அவர்கள் சரியாக பரிமாறுவதில்லை என்பதால் பட்டியலின சிறுமிகளை உணவு வழங்கும்படி ஆசிரியர்கள் கூறியிருந்தனர்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT