அயோத்தி ராமர் கோயில் 
ஆன்மிகம்

முற்பிறவியில் செய்த தவத்தின் பயன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

காமதேனு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பூஜைகள் செய்வதற்கு அவர் முற்பிறவியில் செய்த தவம்தான் காரணம் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில்  கும்பாபிஷேகம்  இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பகல் 12.20 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. 

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தருமபுரம் ஆதீனகர்த்தர்

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ”ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் தொடர்பு உடையவை. தருமையாதீனத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் ராமர் ஜடாயு தொடர்பு குறித்து திருஞானசம்பந்த பெருமானால் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பாடல் பெற்றுள்ளது. இங்கு ஜடாயு தகனம் செய்த குண்டம் தற்போதும் அமைந்துள்ளது.  

இந்தியாவின் சிறந்த ஆட்சி, ராமர் ஆட்சியாகும். அப்படிப்பட்ட ராமருக்கு 100 கோடி இந்திய மக்கள் மனம் மகிழும்படி கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. முற்பிறவியில் செய்த  தவத்தின்  பயனாக, அதில் கிடைத்த புண்ணியங்களின் விளைவாக பிரதமர் மோடி பல்வேறு ஆலயங்களில் சுற்றுப்பயணம் செய்து ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உலகமே இதனை வரவேற்கிறது. ஆலய கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT