ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.87 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தில் ராமபிரான் இலங்கைக்குச் சென்று இராவணனை கொன்று, சீதையை மீட்டு, ராமேஸ்வரத்தில் அதன் பாவத்தை போக்கிக் கொள்ள சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்ட இடம் தான் தற்போது ராமேஸ்வரம் இராமநாதர் சுவாமி கோயில் என்று கூறப்படுகிறது.
வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் குளித்து, காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் தெற்கில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்திலும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். அண்மையில் ராமர் கோயில் திறப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி இங்கு வந்து வழிபட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. இங்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் உண்டியல் நிரம்பியதை அடுத்து நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் நடைபெற்ற இப்பணியில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் ரூ. 1 கோடியே 87 லட்சத்து 3 ஆயிரத்து 816 கிடைத்தது. மேலும் தங்கம் 106 கிராமும், வெள்ளி 12 கிலோ 075 கிராமும், வெளிநாட்டுப் பணம் 274-ம் கிடைத்தன என அறநிலையத்துறை இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.