இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர் 
க்ரைம்

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு... இயக்குநர் அமீருக்கு சம்மன்; பரபரப்பில் கோலிவுட்

காமதேனு

ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்

டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் என்பவர் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது கடத்தல் நெட்வொர்க், சர்வதேச நாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கடத்தியதும், ஜாபர் சாதிக் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியானதும் ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த அவரை கடந்த 9ம் தேதி டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

ஜாபர் சாதிக்குடன் இயக்குநர் அமீர்

இந்நிலையில் ஜாபர் சாதிக்கிடம் நெருக்கமாக உள்ள நண்பர்கள், அவருடைய தொழில் பங்குதாரர்கள், திரைப்படத்துறையில் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் விசாரணை நடத்தும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமாக இருந்து வந்த இயக்குநர் அமீரை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி பேச்சுகள் எழுந்து வந்தன. அப்போது அமீர் ஜாபர் சாதிக், தொழில் ரீதியாக தனக்கு தெரியுமே தவிர, அவரது சட்டவிரோத செயல்கள் பற்றி தனக்கு தெரியாது என்றும், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தில் வழக்கில் வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT