துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் 
க்ரைம்

டெல்லி சலூன் கடைக்குள் நடந்த பயங்கரம்... 2 பேர் சுட்டுக்கொலை!

காமதேனு

டெல்லியில் சலூன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு இரு இளைஞர்களை படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தென்மேற்கில் உள்ள நஜாப்கார் பகுதியில் சலூன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த சலூனில் நேற்று பல வாடிக்கையாளர்கள் முடிதிருத்தம் செய்துகொள்ள வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். அதில் இருவருக்கும் குண்டு பாய்ந்தது. அதில் காயம் அடைந்த ஒருவர் மர்ம நபர்களை நோக்கி தங்களை விட்டு விடுமாறு  கெஞ்சினார். ஆனாலும்,  மனம் இறங்காத அந்த நபர்கள்  அவரது தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டனர்.

இந்த தாக்குதலில் 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைக்கண்டு மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதைப்பார்த்த பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.  துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள், தங்களால் சுடப்பட்ட இருவரும் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார்  வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின்  விசாரணையில், உயிரிழந்தவர்கள்  சோனு மற்றும் ஆஷிஸ் எனவும், இருவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், வாலிபர்களுக்கு இடையிலான குழு மோதலில் இந்த படுகொலைகள் நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின்  மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான இடத்தில் இரட்டைக் கொலைகள் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT